Wednesday, April 22, 2015

மருத்துவத் துறையைச் சீரழித்து வரும் நோய்கள்!

மருத்துவத் துறையைச் சீரழித்து வரும் நோய்கள்!

சில பத்தாண்டுகளுக்கு முன் இதய நோய் அல்லது சிறுநீரகச் செயலிழப்பு போன்ற நிலைவந்தால், ஏழை எளிய மக்கள் விதி முடிந்துவிட்டது என்பதாக, மரணத்தை எதிர்கொள்வதாக இருந்த நிலை இன்று மாறியிருக்கிறது. ஆனால், இது எப்படிப்பட்ட மாற்றம்? காசு இருந்து செலவு செய்தால் இந்நோய்களைக் குணப்படுத்த இயலும் அல்லது மரணத்தை ஒத்திப்போட முடியும். மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள், அரசு ஆதரவு, காப்பீடு பாதுகாப்பு இல்லாத நிலையில், அடித்தட்டு மக்களை மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தைக்கூடப் பெரும் கடனாளியாக மாற்றிவிடுகிறது. மகாராஷ்டிரம், பஞ்சாப், ஆந்திரம் முதலான மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து விரிவாக ஆய்ந்து தொடர்ந்து எழுதிவரும் பத்திரிகையாளர் பி.சாய்நாத், இத்தற்கொலைக்கான காரணங்களில் ஒன்று மருத்துவச் செலவு என்று நிறுவியிருக்கிறார். அதாவது, நோயினால் சாவு என்ற நிலை மாறி, நோய்க்குச் செய்த செலவால் சாவு என்ற நிலையைத்தான் மருத்துவத் துறையில் புகுத்தப்பட்டுள்ள தனியார்மயம் ஏற்படுத்தியிருக்கிறது.

“கிட்னி, லிவர், ஹார்ட்..” – ரெண்டு வாங்குனா ஒண்ணு ஃப்ரீ
வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு நம்மூர் எளிய மக்களின் சிறுநீரகங்களையும் இதர உடல் உறுப்புகளையும் அறுத்து விற்பதற்கு இங்கு சில மருத்துவர்களும் தனியார் மருத்துவமனைகளும் தயங்குவதில்லை. இந்திய அளவில் கிட்னி வியாபாரம் மருத்துவச் சுற்றுலாவுடன் இணைந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். பல விவசாயிகளின், நெசவாளர்களின் கிட்னி காணாமல் போனது இப்படித்தான்.
இந்தியாவின் மருத்துவத் தலைநகராக சென்னை கருதப்படுகிறது. இந்தப் ‘பெருமை’யை சென்னை பெற்றதற்கான முக்கிய காரணம், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைதான். சென்னை வில்லிவாக்கத்துக்கு மருத்துவத் துறை சூட்டியிருக்கும் பெயர் “கிட்னிவாக்கம்”. அந்தளவிற்கு அங்கு கிட்னி வியாபாரம் அரசிற்குத் தெரிந்தே நடந்தது. 2004-ம் ஆண்டு சுனாமி சென்னை மீனவர்களின் வாழ்க்கையைக் குலைத்துப் போட, வறுமையைச் சமாளிக்க மீனவப் பெண்கள் பலர் தங்கள் கிட்னிகளை விற்றார்கள். அப்போதைய கமிஷனர், “29 மீனவப் பெண்களிடம் கிட்னி திருட்டு நடந்துள்ளது. சென்னையில் ஐந்து மருத்துவமனைகளும், மதுரையில் மூன்று மருத்துவமனைகளும் இதில் ஈடுபட்டுள்ளன என்று எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார். இத்திருட்டையொட்டி 13 மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டாலும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அனைவரும் தப்பித்துக் கொண்டனர். இப்போது கிட்னி திருடர்கள் சென்னை கடற்கரையில் இருந்து தங்களின் முகாமை நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரிக்கு மாற்றியிருக்கிறார்கள்.

மருத்துவர்கள் – மருந்து கம்பெனிகளின் சட்டவிரோதக் கூட்டு
மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது மருந்துகளின் பொதுப்பெயரில் அல்லாமல், வியாபாரப் பெயரில் பரிந்துரை செய்கின்றனர். நோயாளிகளுக்கு எந்த மருந்தை எதற்காகச் சாப்பிடச் சொல்கிறார்கள் என்றோ, எந்த மருந்தில் என்னென்ன கூட்டுப் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன என்றோ, அது அவசியமா என்றுகூடத் தெரியாது. இந்த நிலையில் தன்னுடைய நோய்க்கு விலை குறைவான மருந்தே போதுமானது என்றாலும்கூட, மருத்துவர் பரிந்துரை செய்த விலையுயர்ந்த மருந்துதான் தன்னுடைய உடலுக்கு ஏற்றது, மற்றதை வாங்கிச் சாப்பிட்டால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்றும் நோயாளி அஞ்சுகிறார்.
உதாரணமாக, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், ஒரு நிறுவனத்தால் 10 மாத்திரைகள் கொண்ட அட்டை வெறும் 25 ரூபாய்க்கும் இன்னொரு நிறுவனத்தால் ரூ 385-க்கும் விற்கப்படுகின்றன. நீரழிவைக் கட்டுப்படுத்த 10 மாத்திரைகள் ரூ 133 என்ற விலையில் முன்னணி மருந்து நிறுவனத்தால் விற்கப்படுகிறது. அதே மாத்திரை மற்றொரு நிறுவனத்தால் வெறும் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நோயாளிகளுள் பெரும்பாலோர் ஏழைகள்தான். மருத்துவத்துக்கே தங்களுடைய வருவாயில் அல்லது சேமிப்பில் அதிகபட்சம் செலவிடுகிறார்கள். மக்களுடைய நல்வாழ்வில் அக்கறை செலுத்த வேண்டிய எந்த அரசும் இந்த விலை வித்தியாசத்தைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது. ஆனால், மருந்து உற்பத்தி நிறுவனங்களோ போதுமான இலாபம் என்பதில் திருப்தி கொள்ளாமல், கொள்ளை லாபம் என்ற இலக்கில் ஏழை நோயாளிகளைச் சுரண்டுகின்றன. தனியார் நிறுவனங்களுக்குக் கட்டற்ற சந்தையை அமைத்துக் கொடுத்ததன் விளைவுதான் இது.

மருந்துகளின் விலை உயர்வுக்கு அப்பால், போலி மருந்துகளும், தடை செய்யப்பட்ட மருந்துகளும் இந்தியாவில் தாராளமான புழக்கத்தில் உள்ளன. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் இலாபத்தை முன்னிட்டு போலி மருந்துகளின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மேம்போக்கான நடவடிக்கைகளை எடுக்கத் துணியும் அரசும் அதிகார வர்க்கமும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்வதற்குச் சட்டபூர்வ அனுமதி அளிக்கின்றன.
மருத்துவத் துறையின் இன்னொரு அருவெறுக்கத்தக்க கோர முகம், அதில் புரையோடிப் போயிருக்கும் ஊழல். உலகெங்கும் ஆண்டுக்கு 7.2 இலட்சம் கோடி டாலர் சுகாதாரத் துறைக்காகச் செலவிடப்படுவதாகக் கூறுகிறது, உலக சுகாதார நிறுவனம். இதில் 10 முதல் 25 சதவீதம் வரை ஊழலில் கரைந்துவிடுகிறது என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையல்ல. ஒரு சாமானியக் குடும்பம் தன் சகல சந்தோஷங்களையும் இழக்க இன்றைக்கெல்லாம் அந்த வீட்டுக்கு ஒரு நோயாளி போதும். அதுவும் புற்று நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் என்றால், உடலும் மனமும் துடிதுடிக்க அந்தக் குடும்பமே துயரத்தைச் சுமக்க வேண்டும். தமது பல நாள் உழைப்பின் மொத்த பலன்களையும் மருத்துவமனையின் மேஜையில் கொண்டுவந்து கொடுத்து, பரிதவித்து நிற்கும் இப்படிபட்ட துயரர்களிடம் நடத்தப்படும் ஊழல், கட்டணக் கொள்ளையைவிடக் கொடூரமானது.

இலவச மருத்துவ சேவை: சலுகை அல்ல, உரிமை
சீனா அடிப்படையான மருத்துவ நலத்தில் பாராட்டத்தக்க தன்னிறைவைப் பெறக் காரணமாக இருந்தது அந்நாட்டு அரசின் விருப்புறுதி மட்டுமே அல்ல. அவர்கள் மேற்கொண்ட வழிமுறையும் முக்கிய காரணமாகும். அந்நாட்டில் மருத்துவம் தொடர்பாக “ரூல் 57″ என்றொரு சட்டவழிமுறை ஏற்படுத்தப்பட்டது. இதன்படி,
1. ஆங்கில மருத்துவம் பயின்ற ஒவ்வொருவரும் கட்டாயமாக உள்நாட்டு மருத்துவமான அக்குபஞ்சர் உள்ளிட்ட ஆறு அங்கங்களை உள்ளடக்கிய பாரம்பரிய சீன மருத்துவத்தைப் பயின்றால் மட்டுமே மருத்துவப் பதிவு வழங்கப்படும்.
2. வெளிநாட்டிலிருந்து ஆங்கில மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளபோது, அது உள்நாட்டு மருந்துகளைவிட சிகிச்சையளவில் உயர்வானதென நிரூபித்தால் மட்டுமே உரிமம் கிடைக்கும்.
3. கிராமப்புறங்களிலும் தொழிலமைப்புகளிலும் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு வெறுங்கால் மருத்துவர்கள் என அங்கீகரிக்கப்பட்டு, பகுதி நேரமாக மருத்துவப் பணியாற்றப் பணிக்கப்பட்டனர்.
வெறுங்கால் மருத்துவர்கள் தொடர் புத்தாக்கப் பயிற்சிகளின் ஊடாக தங்களை ஊரக மருத்துவ நலப் பயிற்சியாளர்களாக வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டனர். இப்படி படிப்படியாகத் தன்னை வளர்த்துக் கொண்ட வெறுங்கால் மருத்துவர்களில் ஒருவர்தான் தற்போதைய சீனாவின் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சூ சென். மருத்துவத்தை சமூகமயமாக்கும் நோக்கத்தோடு 1978-ல் நடந்த சர்வதேச நாடுகளின் கூட்டமொன்றில் உருவாக்கப்பட்ட அல்மா ஆடா தீர்மானத்திற்கு அடிப்படையாக இருந்தது சீனாவின் வெறுங்கால் மருத்துவ முறைதான்.
இந்தியாவில் தற்பொழுது நடைமுறையிலுள்ள கார்ப்பரேட் மருந்து கம்பெனிகள், தனியார் மருத்துவமனைகள் நலன் சார்ந்த சுகாதாரக் கொள்கைக்குப் பதிலாக மக்கள் நலனை முன்னிறுத்தும் வெறுங்கால் மருத்துவர்கள் போன்ற கொள்கை வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்பொழுதுதான் அனைவருக்குமான அடிப்படை மருத்துவ மற்றும் சுகாதார நலனை உறுதிப்படுத்த முடியும்.

நன்றி :  வினவு  வலை தளம்

No comments:

Post a Comment